சேலம் : கேரளாவில் கடந்த 2ம் தேதி சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அசைவ ஓட்டல்கள், கடைகளில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று சோதனை நடத்தினர். அதில், 113 ஓட்டல்களில் நடத்திய சோதனையில், 19 ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன், ஆட்டுக்கறி, மீன், நண்டு போன்றவை 133.8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அதிகாரிகள் அழித்தனர். இதன் மதிப்பு ₹34,650ஆகும். சுகாதாரமற்ற உணவுகளை தயார் செய்த 8 கடைகளுக்கு ₹13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், 22 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலத்தில் 113 ஓட்டல்களில் நடத்திய சோதனையில் 19 ஓட்டல்களில் இருந்து கெட்டுப்போன 133 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்த 30க்கும் மேற்பட்ட ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. காலாவதியான, இறைச்சி மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. முறையாக வேக வைக்கப்படாத உணவுகளால், பொதுமக்களின் உடல்நலன் பாதிக்கப்படுகிறது. எனவே, சரியாக வேகாத உணவு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்படும்,’’ என்றனர்.