×

தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் புத்தாக்கப் போட்டியில் நெல்லை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரி மாணவி ரூ. 1 லட்சம் வென்று சாதனை

நெல்லை :  தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்திய புத்தாக்கப் போட்டியில் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வென்ற நெல்லை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரி மாணவி அஸ்வதி மோகனை கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு பாராட்டினார். தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கண்டுபிடிப்பாளர்களுக்கான புத்தாக்கப் போட்டிகளை கடந்த 2016ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக நடத்தி வருகிறது.

இதில் வேளாண் தொழில், ஸ்மார்ட் சிட்டி, ஹெல்த் கேர், பின்-டெக் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறை மாணவர்களின் கண்டுபிடிப்புகள், அதில் ஏற்படும் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும், மாணவர் குழுக்கள்  தங்களது புதுமையான யோசனைகளை வழங்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன்படி இந்தாண்டு நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழகம், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி, சேரன்மாதேவி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் 3 சுற்றுகளாக புத்தாக்கப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் நெல்லை மண்டலம் சார்பில் நடந்த மாணவர்களுக்கான இறுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்ற நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் எம்.இ. கணினி அறிவியல் பிரிவில் 2ம் ஆண்டு மாணவி அஸ்வதி மோகன், ‘சைபர் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் சைபர் குற்றங்களை தடுப்பது குறித்தும், இணையதள நெட்வொர்க்கில் ஏற்படும் இடர்பாடுகளை களைவது, பாதுகாப்பது மற்றும் சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது போன்ற அம்சங்களை கண்டுபிடித்து புத்தாக்கப் போட்டியில் வெற்றிபெற்று ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வென்றார்.

சாதனை படைத்த மாணவி அஸ்வதி மோகன், ஊக்குவித்த பொதுமேலாளர்கள் ஜெயகுமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், தொழில்முனைவோர் பயிற்சி துறை இயக்குநர் லூர்டஸ் பூபாலராயன், கணினித் துறை பேராசிரியர் அரவிந்த்  சுவாமிநாதன் உள்ளிட்டோரை கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு ஆகியோர் பாராட்டினர்.

Tags : Paddy ,FX Engineering College ,Entrepreneur Development Institute , Nellai: Nellai won a cash prize of Rs.
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...