சென்னை: தமிழகத்தில் மின்தேவை உயர்ந்தாலும் எவ்வித தடையும் இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை, அண்ணாசாலையில் மின்வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு. கோடை காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்குவது குறித்து காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: 2020ம் ஆண்டில் பூஜ்ஜியம் அளவுக்கு தான் 16,000 மெகாவாட்டிற்கு மேலான மின்நுகர்வு இருந்தது. 2021ம் ஆண்டில் 8 நாட்கள் 16 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் இருந்தது. நடப்பாண்டில் 17 நாட்கள் 16,000 மெகாவாட்டிற்கு மேல் மின்நுகர்வு இருந்தது. எட்டு நாட்களில் 6 நாட்கள் 16,000 மெகாவாட்டிற்கு மேல் அதிகபட்ச மின்நுகர்வு பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட தற்போது கூடுதலான மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே இருந்த 7.67 கோடி யூனிட் என்பது தற்போது 8.13கோடி யூனிட்டாக உயர்ந்துள்ளது.
அப்படி உயர்ந்தாலும் கூட எவ்வித தடையும் இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் முதல்வர் எடுத்த பல்வேறு வழிகாட்டுதல்களின் காரணமாக நம்முடைய மின்சார வாரியம் மே 1ம் தேதி 1.44 லட்சம் யூனிட் வெளிமாநிலங்களுக்கு கொடுத்துள்ளோம்.தமிழகத்தில் தேவையான அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு மின்விநியோகம் நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த இடங்களிலாவது மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டால் அது ஏதாவது பராமரிப்பு பணியின் காரணமாக இருக்கலாம் அல்லது இடையில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இருக்கலாம்.
தமிழகத்தில் மட்டும் தான் மிகச்சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை விட தற்போது சுய மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. புனல் மின் உற்பத்தியை பொறுத்தவரைக்கும் ஒன்றிய அரசு நிர்ணயம் செய்த இலக்கை விட நாம் 16% உற்பத்தியை அதிகரித்துள்ளோம். மேலும் 3 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு ஏப்ரல், மே மாதங்களுக்கு குறுகிய கால ஒப்பந்தங்கள் கோரப்பட்டு அதன்மூலம் மின்சாரம் பெற்று நாம் விநியோகம் செய்து வருகிறோம். நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்கப்படும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் எங்களுக்கு தனியாக இணைப்பு வேண்டும் என கேட்டால், அவர்களுக்கு வழங்கப்படும். மின்வாரியத்தின் வரலாற்றிலேயே இரண்டு ஆண்டுகளில் 116 துணை மின்நிலையங்கள் அமைப்பது முதல்முறையாகும். ஓராண்டில் 24,036 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.