ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட் தென்மாவட்டங்களில் பிரபலமானது. இங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் கேரள நகரங்களுக்கு காய்கறி தினமும் அனுப்பப்படுகிறது. இந்த மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், தேவத்தூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, வடகாடு, பால்கடை, பெத்தெல்புரம், கண்ணனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்வர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.300 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டது. வரத்து குறைவால் நேற்று ஒரு பெட்டி ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது.