திருமலை : திருப்பதி கோயில் அருகே நிறுத்தியிருந்த காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே அறைகள் ஒதுக்கீடு செய்யும் சி.ஆர்.ஓ. அலுவலகம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு டாக்சி கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. சிறிதுநேரத்தில் 5 பக்தர்களை ஏற்றிக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்ய அதன் டிரைவர் முயன்றார். அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்த பேட்டரியில் இருந்து புகை வந்தது.
இதைக்கண்ட பக்தர்கள் அலறியடித்தபடி தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்கினர். அதற்குள் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக்கண்ட அவ்வழியாக சென்ற பக்தர்களும் அலறியடித்தபடி ஓடினர்.இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். காரில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.