நாகர்கோவில் : இரணியல் அருகே ஒடுப்பரை நாகரம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை மாதம் கடைசி ஞாயிறு அன்றுஆயில்ய நட்சத்திரம் வரும் நாள் கொழுக்கட்டை சுட்டு படையல் திருவிழா நடப்பது வழக்கம். இந்த திருவிழா கடந்த 2008ம் வருடம் நடந்தது. அதன் பிறகு நேற்று கொழுக்கட்டை சுட்டு படையல் திருவிழா நடந்தது. இதற்காக அங்கு வழிபடும் சமூக மக்கள் கொழுக்கட்டை தயாரித்து கோயில் அருகே பெரிய இடத்தில் குழி தோண்டி அதில் தேங்காய் கதம்பை அடிக்கி தீ வைத்து, அதில் கொழுக்கட்டை சுட்டு சாமிக்கு படையல் செய்தனர்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவகையில் ஒருவருக்கு ஒன்று வீதம் கொழுக்கட்டை செய்து படைத்தனர். இந்தக் கொழுக்கட்டை 750 கிராம் பச்சரிசி மாவுடன், 450 கிராம் சர்க்கரை, ஒரு மட்டி பழம், 10 கிராம் ஏலம், 10 கிராம் சுக்கு, ஒரு தேங்காய் ஆகியவற்றை கொண்டு ஒன்றாக பிசைந்து செய்யப்படும். வாழை இலையில் கொழுக்கட்டை வடிவில் வைத்து, அதனை தென்னை ஓலை குருத்து கொண்டு மூடி, அதன்மேல் கைதை நார் கொண்டு கட்டிஎடுத்துச் செல்லப்படும்.
கோயில் அருகே உள்ள மைதானத்தில் அதற்காக பிரத்யேகமாக வெட்டப்பட்ட குழியில் கதம்பை கொண்டு நெருப்பு வைத்து ,அதன் மேல் கொழுக்கட்டை வைத்து சுடப்பட்டு நாகரம்மனுக்கு படைக்கப்படும். இதற்காக எங்கள் சமூகத்தினர் எங்கெல்லாம் உள்ளனரோ அவர்கள் வீட்டில் கொழுக்கட்டை தயார் செய்து கோயிலுக்கு எடுத்து சென்றனர். குடும்பம் ஒற்றுமையாக இருப்பதற்கு இந்த வழிபாடு செய்யப்படுகிறது என்றனர்.