×

அன்னையர் தினத்தில் கோவை இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஆனந்த் மகேந்திரா

கோவை: கோவை இட்லி பாட்டிக்கு அன்னையர் தினத்தில் வீடு கட்டிக்கொடுத்து அவரது கனவை ஆனந்த் மகேந்திரா நிறைவேற்றியுள்ளார். கோவை ஆலாந்துறையை அடுத்த வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி (85). இவர், ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு கடந்த 30 வருடங்களாக விற்பனை செய்து வருகிறார். யார் உதவியும் இல்லாமல் அவரே இட்லி, சட்னி, சாம்பார் தயார் செய்வார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். அதற்கு பிறகுதான் விலையை கூட்டி உள்ளார். இட்லி சமைக்க காஸ் அடுப்பு கிடையாது. மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது. சட்னி அரைக்க மிக்ஸி கிடையாது. எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும் தான்.

சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடியற் காலையிலேயே தயார் செய்து விற்று வருகிறார். இவரது இந்த கை பக்குவத்துக்கு சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் வந்து செல்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா கடந்த 2 ஆண்டுக்கு முன், அவரை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கினார்.

இதனை தொடர்ந்து பாரத் காஸ் மாதம் தோறும் இரண்டு சிலிண்டர்களையும், ஹெச்.பி காஸ் ஒரு சிலிண்டரையும் வழங்கி வருகிறது. மேலும், இட்லி பாட்டி ஆனந்த் மகேந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் கடையை விரிவுப்படுத்த தனக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அவரும் ஆனந்த் மகேந்திராவிடம் பாட்டியின் கனவு குறித்து தெரிவித்தார். இதையடுத்து அதை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
அதன்படி, 3.5 சென்ட் நிலத்தில் கமலாத்தாள் பாட்டிக்கு வீடு மற்றும் இட்லிக்கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளை மகேந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி 28ம் தேதி ரூ.7 லட்சம் செலவில் துவங்கியது.

இதையடுத்து, கடந்த 5ம் தேதி வீடு கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு கமலாத்தாள் பாட்டிக்கு அந்த வீட்டை பரிசாக அளித்தனர். இதனை மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர், ‘‘எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவருக்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Anand Mahendra ,Coimbatore ,Mother's Day , Anand Mahendra builds a house for his grandmother in Coimbatore on Mother's Day
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்