சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே அடகு கடை சுவரில் துளையிட்டு புகுந்து 13 பவுன் நகை, ரூ.1.20 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் 200 பவுன் நகை தப்பியது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த வரகூரைச் சேர்ந்தவர் பாலாஜி (45). இவர், பவித்ரம் பஸ் நிறுத்தம் அருகே வணிக வளாகத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறந்து பார்த்தபோது, சுவரில் துளை போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கல்லாவில் வைத்திருந்த ரூ.1.20 லட்சம் மற்றும் 13 பவுன் நகையை காணவில்லை. நள்ளிரவில் சுவரில் துளையிட்டு புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த நகை -பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. லாக்கரை உடைக்க முடியாததால், அதில் இருந்த 200 பவுன் நகைகள் தப்பியது. இதுகுறித்து புகாரின்படி எருமப்பட்டி போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அருகில் உள்ள மெடிக்கல் கடையின் பின்வாசல் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர், பொது சுவரில் துளை போட்டு அடகு கடைக்குள் நுழைந்திருப்பது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையரை தேடி வருகின்றனர்.