×

நாகை, மயிலாடுதுறை, புதுகையில் மழை: வேதையில் உப்பு உற்பத்தி பாதிப்பு

திருச்சி: தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுபுயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 10ம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்தது.  நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேற்று அதிகாலை கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் பாத்திகளில் மழைநீர் தேங்கி நின்றதால் 3,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து தார்பாய்களை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து வேதாரண்யம் பகுதியில் கத்திரி வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடந்து வந்தது.

இந்நிலையில் பாத்திகளில் நேற்று பெய்த மழையால் நீர் தேங்கியுள்ளதால் மீண்டும் உப்பு உற்பத்தி துவங்குவதற்கு ஒரு வாரமாகும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், திருவெண்காடு நேற்று அதிகாலை மேற்கண்ட பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. இதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இந்த மழை பருத்தி பயிருக்கு மிகுந்த பயனை தரும். மேலும் கோடை உழவு செய்வதற்கு இந்த மழை உதவும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, தண்டலை, பட்டங்காடு, அம்மாபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. கடும் வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகை, காரைக்காலில் 1ம் எண் புயல் கூண்டு
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுபுயலாக வலுப்பெற்று நகரக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடத்துள்ளதன் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் இன்று 2வது நாளாக 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags : Mayiladuthurai , Nagai, Mayiladuthurai, Pudukai rain: Impact of salt production on Veda
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...