கொழும்பு: இலங்கையின் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய உள்ளதாகவும், புதிதாக ஆட்சி அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையான அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றன. எனினும், தான் பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என்று பிரதமர் மகிந்தா ராஜபக்சே கூறிவந்தார். இதற்கிடையே மக்களின் போராட்டத்தின் தீவிரத்தை குறைப்பதற்காக, இலங்கையில் மீண்டும் 2வது முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் ஆளும் அரசுக்கு எதிரான மக்களின் கோபம் குறைந்தபாடில்லை. இதற்கிடையே அவசர நிலை பிரகடனத்துக்கு சர்வதேச நாடுகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இலங்கை மக்களின் உண்மையான பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு நீண்ட கால தீர்வுகளே அவசியமாகும் என்றும், மாறாக அவசரகால நிலைமை சட்டத்தினால் அதனை செய்ய முடியாது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, அதற்காக போராடும் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் அதிகாரபூர்வ அறிக்கை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங், இலங்கைக்கான இங்கிலாந்து தூதர் சாரா ஹூல்டன், இலங்கைக்கான நியூசிலாந்து தூதர் மைக்கல் அப்பல்டன், இலங்கைக்கான கனடா தூதர் டேவிட் மெக்கின்னன், நார்வே, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பிரதமர் மகிந்தா ராஜபக்சேவுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுவதால், அவர் தனது பதவியை நாளை (திங்கள்) ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதியதாக பிரதமர் பதவியை ஏற்கும்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சமாகி ஜன பலவேகயா கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவை, அதிபர் கோத்தபய தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், இடைக்கால அரசை நடத்துமாறும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடி இதுதொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக கூறியதாக கூறப்படுகிறது. மேலும் அதிபர் கோத்தபய தரப்பில், இலங்கையில் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்த வேண்டுமென்றால், அதுதொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட மசோதாவை நிறைவேற்றி தனக்கு அனுப்பலாம் என்றும் சஜித்திடம் பேசியதாக கூறப்படுகிறது. புதிய பிரதமர் பதவியை ஏற்று, இடைக்கால அரசை அமைக்க சஜித் பிரேமதாசா சம்மதம் தெரிவிப்பாரா? அல்லது அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் கோரிக்கையை நிராகரிப்பாரா? என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடை விதிக்க மறுத்த நீதிபதி மீது கடுப்பு
கடந்த 5, 6ம் தேதிகளில் நாடாளுமன்ற வளாகம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்குமாறு தலங்கமை போலீசார் சார்பில், கடுவலை நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தடை விதிப்பு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது. இதனால் கோபமடைந்த போலீசார், நீதிபதி சானிமா விஜேபண்டாரவின் வீட்டுக்கு அளித்து வந்த பாதுகாப்பை திடீரென விலக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நீதிபதியின் வீட்டிற்கு அளித்த பாதுகாப்பை விலக்கிக் கொள்ளவில்லை என்று போலீஸ் ஊடக பொறுப்பாளர் அத்தியட்சர் நிஹால் தெரிவித்தார்.