பந்தலூர்: பந்தலூர் அருகே பிறந்து சுமார் 1 வாரமே ஆண பெண் பச்சிளங்குழந்தை சடலமாக கிணற்றில் மிதந்தது. கிணற்றில் வீசிச் சென்றது யார்?என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி மண்ணாத்திவயல் பகுதியில் பயன்படுத்தாத பஞ்சாயத்து கிணற்றில் குழந்தை ஒன்று நேற்று இறந்த நிலையில் மிதந்தது. பொதுமக்கள் மூலம் இத்தகவலறிந்த சேரம்பாடி எஸ்ஐக்கள் சத்தியன், தினேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவயிடம் வந்து கிணற்றில் சடலமாக மிதந்த பெண் குழந்தை உடலை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில், ‘‘பிறந்து சுமார் 1 வாரமே ஆண பெண் பச்சிளங் குழந்தையை யாரோ கிணற்றில் வீசி சென்றுள்ளனர். குழந்தையை கொன்று கிணற்றில் யாராவது வீசினார்களா? அல்லது முறை தவறி பிறந்த குழந்தையா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றோம்’’ என்றனர்.