நித்திரவிளை: வள்ளவிளை மீனவ கிராமத்தில் கடலரிப்பு தடுப்பு சுவருக்கு அனுமதி பெற்றுவிட்டு கேரளாவுக்கு பாறாங்கற்கள் கடத்த முயன்ற 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதியில் பல பகுதிகளில் கடலரிப்பு தடுப்பு சுவர், அலை தடுப்பு சுவர் மற்றும் துறைமுக விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 5 டாரஸ் டிப்பர் லாரிகள் கடலரிப்பு மற்றும் அலை தடுப்பு சுவர் பணிக்கு பயன்படுத்தப்படும் பாறாங்கற்களை ஏற்றிக் கொண்டு நீரோடியை கடந்து கேரளா செல்ல முயன்றது.
சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் சந்தேகமடைந்து லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வள்ளவிளை மீனவ கிராமத்தில் கடலரிப்பு பணிக்கு பாறாங்கல் ஏற்றிக் கொண்டு வந்த அனுமதி இருந்தது. ஆனால் கற்களை அங்கு இறக்காமல் கேரளா கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. உடனே சோதனை சாவடி போலீசார் கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், எஸ்.ஐ. ஜெயக்குமார் மற்றும் போலீசார் 5 லாரிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
லாரிகளை ஓட்டி வந்தவர்கள் கொற்றிக்கோடு பகுதியை சேர்ந்த ஜெப விக்டர் (42), குழித்துறை பழவார் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (35), புதுக்கடை வேங்கோடு பகுதியை சேர்ந்த ஷிஜின் (27), பள்ளியாடி எரியன்விளையை சேர்ந்த மகாதேவன் (45), களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியை சேர்ந்த விபின் (30) என தெரிய வந்தது . போலீசார் டிரைவர்கள் மீது கனிமங்களை திருடி சட்டவிரோதமாக கடத்துவதாக வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர் .