ஆவடி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்தது. ஓராண்டு சாதனைகள் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் எல்.இ.டி. திரை அமைத்து விளம்பரம் செய்து வருகின்றனர். இதன் பகுதியாக ஆவடி மாநகராட்சியில் நடைபெற்ற பணிகள் குறித்து மாநகராட்சி அருகே எல்.இ.டி திரை அமைத்து ஒளிபரப்பிவருகின்றனர். அதில் ஓராண்டு சாதனையை அடங்கிய தொகுப்பு காணொளி வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் 7 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள், 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி நிறைவேறியது, திருமுல்லைவாயில், ஆவடி நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்தது, திருமுல்லைவாயில் அராபாத் ஏரியை தூய்மைப்படுத்தியது மற்றும் ரூ.40 கோடிக்கு சாலை, குடிநீர், பாதாள சாக்கடை ஆகிய பணிகள் நடைபெற்று வருவது குறித்த காணொளி ஒளிபரப்பினர். தொடர்ந்து ஆவடி 37 வார்டு குப்பை கிடங்கிற்கு அருகில், ‘மியாவாக்கி திட்டத்தின்’ கீழ் அடர்ந்தகாடு உருவாக்கும் திட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், துணைமேயர் சூரியகுமார், ஆணையர் சரஸ்வதி பொறியாளர் மனோகர், உதவிப்பொறியாளர் சத்தியசீலன், சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜாபர், ஆவடி மண்டல குழு தலைவர்கள், ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், 37 வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ். மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.