×

சேற்றில் சிக்கி பிளஸ் 2 மாணவன் பலி

காஞ்சிபுரம்: கிணற்றில் குளிக்க முயன்ற பிளஸ் 2 மாணவன், சேற்றில் சிக்கி பரிதாபமாக பலியானான். வாலாஜாபாத் அடுத்த அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சக்திவேல் (17). அவளுர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தான். இன்று விடுமுறை என்பதால் சக்திவேல், தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான். கடந்த ஓராண்டாக விவசாயம் இல்லாத கிணறு என்பதால் சேறும் சகதியுமாக இருந்தது. இதை அறியாத மாணவர்கள், கிணற்றில் குதித்தபோது சக்திவேல் சேற்றில் சிக்கி, வெளியேற முடியாமல் அலறி கூச்சலிட்டான்.

இதை பார்த்ததும் நண்பர்கள், கிராமத்துக்கு சென்று, பொதுமக்களை அழைத்து வந்தனர். அவர்கள், சக்திவேலை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, சேற்றில் சிக்கிய மாணவனை, சடலமாக மீட்டனர். தொடர்ந்து மாகரல் போலீசார் சடலத்தை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பபதிவு செய்து விசாரிக்கின்றனர். பிளஸ் 2 தேர்வு நடந்து வரும் வேளையில், தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவன் சேற்றில் சிக்கி இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Plus 2 student killed in mud
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...