புதுடெல்லி: வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.50 உயர்த்தப்பட்டு மொத்த விலை ரூ.1000 தாண்டி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி,திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம்
தெரிவித்துள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பதிவில், ‘காங்கிரஸ் ஆட்சியின் போது சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.414 ஆக இருந்தது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமாக ரூ.827 எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டது.
இன்று காஸ் விலை ரூ.999 ஆக உள்ளது. மானியமோ பூஜ்ஜியம்.நாட்டில் தற்போது கடுமையான பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிராக கோடிக்கணக்கான குடும்பங்கள் போராடி வருகிறார்கள். காஸ் சிலிண்டர் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘பெட்ரோல்,டீசல், காஸ் விலையை உயர்த்தி வருவதன் மூலம் ஒன்றிய அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்ற பெயரில் பெரும் கொள்ளை நடந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.