திருமலை: கோடை விடுமுறையால் பக்தர்கள் அதிகரித்துள்ளதால் திருப்பதியில் வாராந்திர சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 20 அறைகளில் பக்தர்கள் காத்திருந்து 8 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்கின்றனர். பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏழுமலையான் கோயிலில் வாரம்தோறும் நடக்கும் வாராந்திர சேவைகளான அஷ்டதள பாதபத்ம ஆராதனை, திருப்பாவாடா, நிஜபாத தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டிருந்தது.