பழநி: அக்னி நட்சத்திர கழு திருவிழாவையொட்டி பழநி கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சித்திரை மாத கடைசி 7 நாட்களும், வைகாசி மாத முதல் 7 நாட்களும் என 14 நாட்கள் அக்னி நட்சத்திர கழு திருவிழா நடைபெறும். விழா நாட்களில், காலை மற்றும் மாலை நேரங்களில் கிரிவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வலம் வரும் வருவது வழக்கம். இந்நிலையில் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக கிரிவீதியில் உள்ள சில கடைக்காரர்கள் தங்களது கடைகளின் எல்லைகளை ரோடுவரை நீட்டிப்பு செய்துள்ளனர்.
இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக நேற்று பழநி கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதன்படி உரிய அனுமதியின்றி சாலையோரங்களில் போடப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. 100க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் வாகனங்களில் ஏற்பட்டு எடுத்து செல்லப்பட்டன.