×

நாளை உருவாகிறது அசானி புயல்... தமிழகத்தில் மே 9ல் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!

சென்னை :  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நகர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.நாளை புயலாக வலுவடைந்து வடமேற்கு நகர்ந்து மே 10ல் வட ஆந்திரா, ஒடிசா கரையோரத்தில் நிலவும்.வங்கக்கடலில் உருவான புயல் வடக்கு - வடகிழக்கில் நகர்ந்து ஒடிசா கடற்கரையில் நீடிக்கும்.

புயலின் எதிரொலியாக இன்று, நாளை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வரும் 9ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர்,நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு,சேலம், நாமக்கல், தருமபுரி, காரைக்கால், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 2நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் குறைந்தபட்சமாக 82 டிகிரி அளவை எட்டக்கூடும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..


Tags : Asani ,Tamil Nadu , Asani, Storm, Meteorological Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...