ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் முன்பாக தேனி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையை தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மதுரை-போடி அகலரயில் பாதை திட்டத்தில் முதற்கட்ட மதுரை முதல் தேனி வரையிலான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் அனைத்து விதமான சோதனை ஓட்டங்களும் முடிக்கப்பட்டு பயணிகள் ரயில் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்குவது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். மதுரை முதல் தேனி வரையில் இன்னும் ஒருமாதத்திற்குள் பயணிகள் ரயில் இயக்கப்படும்.
அதுமட்டுமின்றி 12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட உள்ளதால், இதற்கான தொடக்க விழாவில் மத்திய ரயில்வே அமைச்சரை கலந்து கொள்ள அழைப்பு விடுக்க உள்ளேன். மேலும் தேனியில் இருந்து சென்னைக்கு நேரடியாக மக்கள் செல்லும் வகையில், மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை தேனி வரையில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றார்.