புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளி பின்புறமுள்ள தண்டவாள பகுதியில் வெடிச்சத்தம் கேட்டது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வெடிகுண்டு சம்பவம் நடந்த சில நிமிடங்களில் புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அப்பகுதியை கடந்து சென்றதால், ரயிலை கவிழ்க்க சதி வேலையா? என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.கைப்பற்றப்பட்டது நாட்டு வெடிகுண்டு வகையை சேர்ந்தது, மேலும் யாரையாவது கொலை செய்யும் நோக்கில் பதுக்கி வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.
சந்தேகத்தின்பேரில் பெரியார் நகர், மற்றும் அனிதா நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகளை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் துப்பு துலங்கியது. எதிரிகளை தீர்த்துக் கட்டும் நோக்கில் ரவுடிகள் ரிஷி, அரவிந்த் தரப்பு நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது தெரியவந்தது. ரிஷி, அரவிந்த், கவுதம், கவியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள வீரா மற்றும் பெரிய அரவிந்த் இருவரையும் தனிப்படை தேடி வருகிறது.