பெய்ஜிங்: சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.சீனாவின் பெரிய நகரமான ஷாங்காயில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ஹாங்சூ நகரில் செப்.10ம் தேதி ஆசிய விளையாட்டு போட்டியையும், அதனை தொடர்ந்து ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அதே சமயம், சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி தள்ளி வைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போட்டி நிர்வாகிகள் ட்வீட் செய்த சிறிது நேரத்தில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், ‘சீனாவின் ஹாங்சூ நகரில் செப்.10ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது போட்டி நடத்தப்படும் என்பது குறித்து பின்னர் ஆலோசித்து தெரிவிக்கப்படும்’ என்று அறிவித்தது.இந்த அறிவிப்பால், ஆசிய போட்டிக்காக தீவிரமாகத் தயாராகி வந்த வீரர், வீராங்கனைகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.