×

திருபுவனையில் நள்ளிரவு டாக்டரின் தாய் துண்டால் கழுத்து இறுக்கி படுகொலை-காய்கறி தொழிலாளி துணிகரம்

திருபுவனை : திருபுவனை அருகே மனைவியை துண்டால் கழுத்தை இறுக்கி காய்கறி கடை   தொழிலாளி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
   புதுச்சேரி, திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம், பழனி நகரை   சேர்ந்தவர் கலியமூர்த்தி (54). மதகடிப்பட்டில் உள்ள ஒரு காய்கறி மொத்த   விற்பனையகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செந்தமிழ்செல்வி (46).   பிஎஸ்சி முடித்த இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவரது மகன்   யுவராஜ் (23). எம்பிபிஎஸ் முடித்த இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில்   பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். சமீபகாலமாக தம்பதியிடையே   அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 நேற்று  முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 10.30 மணியளவில் கலியமூர்த்தி  வீடு  திரும்பியுள்ளார். மகன் இரவுநேர பணிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.   அப்போது உணவருந்தும்போது கணவன்- மனைவி இடையே வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது.  தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி  அங்கிருந்த துண்டை எடுத்து  மனைவியின் கழுத்தை சுற்றி இறுக்கியதாக  தெரிகிறது. இதில் மூச்சுத் திணறி  செந்தமிழ்செல்வி மயக்கமடைந்தார்.  அப்படியே போட்டுவிட்டு தனது அறைக்கு  சென்றுள்ளார்.

 பின்னர் சிறிதுநேரம்  கழித்துவந்து பார்த்தபோது அவர்  பிணமாக கிடக்கவே அதிர்ச்சியடைந்த கணவர்,  காலை வரையிலும் மனைவி பிணத்துடன்  அங்கேயே இருந்துள்ளார். அதிகாலையில் தனது  உறவினரிடம் நடந்த சம்பவத்தை  அரைகுறையாக கூறிவிட்டு கலியமூர்த்தி  அங்கிருந்து தலைமறைவாகி விட்டாராம்.  இதையடுத்து சந்தேகமடைந்த உறவினர்கள்  கலியமூர்த்தியின் வீட்டிற்கு விரைந்து  வந்து பார்த்துள்ளனர்.

 அப்போது  செந்தமிழ்செல்வி கொலை செய்யப்பட்டு  கிடப்பதை கண்டு கதறிஅழுதனர். உடனே  திருபுவனை காவல் நிலையத்துக்கு தகவல்  கொடுத்தனர். தெற்கு எஸ்பி ஜிந்தா  கோதண்டராமன் உத்தரவின்பேரில்  இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எஸ்ஐ குமரவேல்  தலைமையிலான போலீசார் கொலை  செய்யப்பட்டு கிடந்த செந்தமிழ்செல்வியின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்கு  கதிர்காமத்துக்கு அனுப்பி வைத்தனர்.  உறவினரிடம் புகாரை பெற்ற போலீசார்,  கொலை வழக்குபதிந்து தலைமறைவான  கலியமூர்த்தியை தேடினர். அவர் நேற்று  தனிப்படை வசம் சிக்கியதாக தெரிகிறது.

 அவரை ரகசிய இடத்தில் வைத்து  போலீசார் கொலைக்கான காரணம் குறித்து  துருவிதுருவி விசாரணை  மேற்கொண்டுள்ளனர். இதில் துப்புதுலங்கியது.  பிரேத பரிசோதனைக்குபின் கைது  நடவடிக்கை இருக்கும் என்று காவல்துறை  வட்டாரங்கள் தெரிவித்தன. குடும்பத்  தகராறில் மனைவியை கணவர் துண்டால்  கழுத்து இறுக்கி படுகொலை செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


Tags : Thiruvananthapuram , Thirubuvanai: The murder of a vegetable shop worker in the area near Thirubuvanai
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...