சோழவந்தான் : சோழவந்தான் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. வயல்வெளிகளில் நெற்பயிர்களும் சாய்ந்து மழைநீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சோழவந்தான் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல கிராமங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக ராயபுரம் கிராமத்தில் பல மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதனால், விவசாயி ஒருவரின் மாட்டுக் கொட்டகை முற்றிலும் இடிந்து சேதமானது. பல வீடுகளில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மழையால் பாதித்த பகுதிகளை ரிஷபம் ஊராட்சி தலைவர் சிறுமணி, வி.ஏ.ஓ முத்துராமலிங்கம், ஊராட்சி செயலர் விக்னேஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். நெடுங்குளம் கிராமத்தில் 4 வீடுகள், 1 பெட்டிக் கடை சேதமானது. சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதேபோல, ஊத்துக்குளி கிராமப் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கியது. கடந்த ஒரு வார காலமாகவே மழை மற்றும் சூறைக்காற்றால் இப்பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், விவசாயிகள் வேதனையில் தவித்து வருகின்றனர்.