மும்பை: பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட மூத்த நடிகை மும்தாஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் மூத்த நடிகை மும்தாஜ், கடந்த சில நாட்களாக குடல் எரிச்சல் மற்றும் பெருங்குடல் அழற்சி ஆகிய நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவதியுற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவரது மென்மையான சருமம் காரணமாக பல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது தோல் மிகவும் லேசாக இருப்பதால் மிகவும் தொந்தரவு கொடுக்கிறது. மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக அனுமதிக்கப்பட்டு இருந்தேன்.
தற்போது வரை மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் வந்து நடந்து கொண்டுள்ளேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அப்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அப்போதிருந்தே எனது இடது கையைப் பயன்படுத்த முடியவில்லை’ என்று கவலையுடன் கூறினார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட வீடியோவில், பாலிவுட்டில் மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்; அதற்கு என் கணவரின் அனுமதியைப் பெற வேண்டும்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.