×

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து: 12க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில், 12 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பிரபல தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ஏராளமான மாணவ, மாணவிகளும் இக்கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம்போல் ஏழாயிரம்பண்ணை மற்றும் ஒ.மேட்டுப்பட்டி பகுதிகளை சேர்ந்த மாணவிகளை அழைத்து வருவதற்காக கல்லூரி பேருந்து இயக்கப்பட்ட நிலையில், ஒ.மேட்டுப்பட்டி சாலையில்  சென்று கொண்டிருந்தபொழுது, பேருந்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுமார் 12-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தூர் தீயணைப்பு படை வீரர்கள், விபத்தில் சிக்கிய மாணவிகள் மற்றும் பேருந்து ஓட்டுனரை மீட்டு, உடனடியாக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தூர் டி.எஸ்.பி. விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும், இவ்விபத்தில் ஒரு மாணவி பலத்த காயமடைந்திருப்பதால், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல் அளித்துள்ளது.         


Tags : Sathur ,Virudhunagar district , Virudhunagar, Sattur, college bus, accident, 12 students, injured
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்