சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நீர் பந்தல் கொட்டகை எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் கொட்டகை மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உருவம் பொறிக்கப்பட்ட பேனர் ஆகியவை மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் தேமுதிக தலைமை அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் தேமுதிக அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த நீர் பந்தல் மற்றும் விஜயகாந்த் பிரேமலதா உருவம் பொறிக்கப்பட்டிருந்த பேனருக்கு தீ வைத்து, தப்பியோடியதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கோயம்பேடு பேருந்துநிலைய ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, தண்ணீர்கள் மூலம் தீயை அணைத்தனர். இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் கோயம்பேடு பேருந்துநிலைய காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், தேமுதிக தலைமை அலுவலகத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை விரைவில் பிடிப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதற்கிடையில், தேமுதிக அலுவலகத்தில் புதிதாக இன்று காலை வாட்டர் கூலர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, புதிய தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.