மும்பை: டெல்லி அணியின் டேவிட்வார்னர்-பவுல் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி, 207 ரன் குவித்தது. இதனால், சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற 208 இலக்கை டெல்லி அணி நிர்ணயித்தது. மும்பையில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. காயம் காரணமாக நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஜான்சன் ஆகியோர் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக ஷீன்அபாட், கார்த்திக் தியாகி, ஸ்ரேயஸ் கோபால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். புவனேஷின் முதல் ஓவரில் 5வது பந்தில் மன்தீப் சிங் ‘டக்’ அவுட் ஆனார். 2வதாக பந்து வீசிய அபாட் பந்தில், மிட்சல் மார்ஷ் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன் பிறகு வந்த கேப்டன் ரிஷப் அதிரடியாக ஆடி ஹாட்ரிக்ஸ் சிக்சர், ஒரு பவுண்டரி என 16 பந்தில் 26 ரன் அடித்தார். எனினும், கோபாலின் அதே ஓவரின் கடைசி பந்தில் பந்து இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்புகளை தகர்த்து அவுட் ஆனார். இதன் பின்னர் பவுல் களம் இறங்கினார். ஒரு கட்டத்தில் உம்ரன் பந்துவீச்சில் நேரடியாக வந்த பந்தை கேப்டன் வில்லியம்சன் பிடிக்காமல் கோட்டை விட்டார். இதனால் ஒரு லைப் பெற்ற பவுல் அதிரடியாக ஆடினார். இதையடுத்து ரோமன் பவுல் 67 ரன் (35 பந்து, 6 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்தார். கடைசி ஓவரில் அவர் 19 ரன் குவித்தார். ஓபனராக களம் இறங்கிய டேவிட்வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன் (58 பந்து, 3 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்தார். இருவரும் கடைசி வரை அவுட் ஆகாமல் டெல்லி அணி 207 ரன் குவித்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி 208 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை எட்டும் வகையில் களம் இறங்கியது.