சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பெருமாள் கோயில் மேடு பகுதியில், தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று காலை 6.30 மணியளவில், பணம் எடுக்கச் சென்றவர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து புதுச்சத்திரம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் நள்ளிரவில் ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள், அங்குள்ள சிசிடிவி கேமராவை முதலில் உடைத்துள்ளனர். பின்னர், வெல்டிங் மிஷினால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு, மிளகாய் பொடி தூவிவிட்டு சென்றுள்ளனர்.
தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய், சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். 6 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும், நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்கின்றனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.