சென்னை: இளைஞர்கள் நலன் கருதி சோழிங்கநல்லூரில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசுகையில், ‘சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், விளையாட்டில் முறையாக பயிற்சி அளிப்பதற்கு விளையாட்டு திடல் இல்லாத நிலை உள்ளது. இந்த தொகுதியிலிருந்து விளையாட்டு வீரர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் கலந்துகொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அரசு இடமும் சர்வே எண்.439/2ல் 7 ஏக்கர் இடமும் உள்ளதால் இளைஞர்கள் நலன் கருதி சர்வதேச தரத்துடன்கூடிய ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை அமைக்க வேண்டும்,’ என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ‘அரசின் நிதிநிலைக்கேற்ப இதுதொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசீலிக்கப்படும்,’ என்றார்.