×

நாமக்கல் அருகே துணிகரம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பெருமாள் கோயில்மேடு பகுதியில் லட்சுமி விலாஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பொதுமக்கள் பணம் எடுக்க சென்றனர். அப்போது அங்குள்ள ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட வங்கிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் ஏடிஎம் மையத் திற்கு வந்துள்ளனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவை முதலில் உடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்திருந்த வெல்டிங் மிஷினால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனர். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ₹4 லட்சத்து 89 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஏடிஎம் மையத்தையொட்டியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Namakkal , Venture near Namakkal: Rs 4.89 lakh looted by breaking ATM machine
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம்