×

ஜோத்பூர் வன்முறை; 140 பேர் கைது.! நாளை வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜோத்பூர்: ஜோத்பூர் வன்முறை தொடர்பாக 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, மதம் சார்ந்த கொடிகளை ஏற்றிய நிலையில், இரு தரப்பினரிடையே மோதல் உருவானது. இதில் நடந்த கல்வீச்சு தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்தனர். தொடர்ந்து சமூக வலை தளங்களில் வதந்திகள் பரவியதன் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது.

மக்கள் அமைதியையும், நல்லிணக்கமும் காக்க வேண்டும் என முதல்வர் கேட்டு கொண்டார்.  இதன் ஒரு பகுதியாக ஜோத்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்த உத்தரவை நாளை வரை (மே 6) நீட்டித்து மாவட்ட காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். எனினும், ரைகாபா பேலஸ் பஸ் நிறுத்தம் மற்றும் ரைகாபா ரயில்வே நிலையம் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.  தேர்வுக்கு செல்ல கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மருத்துவ சேவை, வங்கி அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் ஊடக பணியாளர்களுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது.  இன்டர்நெட் சேவை தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. சட்டம்- ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்து மொபைல் இன்டர்நெட் சேவை மீண்டும் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும். வன்முறையை அடுத்து இதுவரை 140 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஜோத்பூரில் நிலைமை அமைதியாக உள்ளது என கூடுதல் டி.ஜி.பி. ஹவா சிங் கூறியுள்ளார்.


Tags : Jodhpur ,Extension , Jodhpur violence; 140 arrested! Curfew extended until tomorrow
× RELATED உரிய பாதுகாப்பின்றி எடுத்து...