சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 2500 உயர பிரான்மலை சுற்றுலா தலமாக உள்ளது. திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் மங்கைபாகர் தேனம்மை திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார். பாதாளம், மத்திபம், ஆகாயம், என மூன்று நிலைகளில் சிவன் சன்னதி உள்ளது. பாண்டி 14 திருத்தலங்களில் ஐந்தாவது திருத்தலமாகவும் அவ்வையார், கபிலரால் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய குறிஞ்சி மலர்களும் இம்மலையில் அதிக அளவில் உள்ளதால் அதிக சுற்றுலா பயணிகள் வந்து தங்கி செல்கின்றனர்.
இங்கு கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு குன்று வளர்ந்த பிடாரி அம்மன் கோயில் அருகே, அரசு சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து பயன்படாத நிலையில் முட்புதர்கள் மண்டி உள்ளது. இதனால் விஷபூச்சிகள் இக்கட்டிடத்தில் தங்குவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் புதிய சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.