குன்னூர்: உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைபாதையில் 18 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டம், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையில் யானை வழித்தடத்தில், நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளால் யானைகள் நடமாட சிரமமபட்டது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து மதுரை உயர் நீதி மன்றம் விசாரணைக்கு எடுத்தது.இந்நிலையில், கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பாரதிதாசன் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், யானைகள் செல்வதற்கு அதிகமாக வழிவிடும்படியும், யானைகள் கடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்கவும் உத்தரவிட்டது.
தொடர்ந்து தற்போது யானைகள் கடக்கும் 9 இடங்களில் 18 வேகத்தடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், தற்போது 8 இடங்களில் 16 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் சாலை விரிவாக்க பணி நிறைவடையாததால் பணி முடிந்த பிறகு வனத்துறை ஆய்வுக்கு பின் வேகத்தடை அமைக்கப்பட உள்ளது. தற்போது, கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இதில், வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாததால் வாகனங்கள் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வர்ணம் பூச வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.