நத்தம்: நத்தம் அருகே செந்துறையில் புனித சூசையப்பர் ஆலய 127வது ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் தேதி புனித செபஸ்தியார் வேண்டுதல் பொங்கல், இரவு திருப்பலியும் நற்கருணை பவனி, தேர்பவனி, இரவு பாடல் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், அன்னதானம் நடந்தது. மறுநாள் மாலை பொது பொங்கல், ஆடம்பர பாடல் திருவிழா திருப்பலி மறைவட்ட பேரருட்தந்தை அந்தோணிசாமி தலைமையில் நடந்தது. அன்று இரவு இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
நேற்று அதிகாலை 3 மணிக்கும் மாலை 4 மணிக்கும் புனிதர்களின் 4 தேர்பவனி ஊர்வலமாக வந்து இரவு ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு திருப்பலியை பங்குதந்தையர்கள் இன்னாசிமுத்து, பிரிட்டோ, மரிய பிரான்சிஸ் பிரிட்டோ, ஆசீர் ஜான்சன், ரூபன், ஞானப் பிரகாசம் ஆகியோர் நடத்தினர். முன்னதாக சந்தைப்பேட்டையில் கிராம பொதுமக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற்றியதற்காகவும், நன்றி செலுத்துவதற்காகவும் புனிதர்களின் தேர் சப்பரத்தில் உப்பு, மிளகுபொரிகளை எறிந்தனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தையர்கள், பங்குபேரவை, பங்கு மன்றங்கள் மற்றும் பங்குஇறைமக்கள் செய்திருந்தனர்.