×

பள்ளிகளில் கட்டாய மத மாற்றம் விவகாரம்: புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

* கட்டாய மதமாற்றத்தை தடுக்க விதிகளை வகுப்பதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்க  நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து நாளை விசாரிக்கப்படும் என்று சென்னை  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிட்ட 2 இடங்கள் தவிர தமிழகத்தில் வேறு எந்த கல்வி நிறுவனங்களிலும் கட்டாய மதமாற்றம் நடந்ததாக எந்த புகாரும் இல்லை.

புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்த பள்ளியில், எந்த தேதியில் மதமாற்றம் நடைபெற்றது என்று மனுதாரர் குறிப்பிடவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார். கட்டாய மதமாற்றத்தை தடுக்க விதிகளை வகுப்பதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. கன்னியாகுமரி, திருப்பூர் சம்பவங்களை தவிர வேறு எந்த இடத்திலும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக எந்த புகாரும் இல்லை என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

வழக்கறிஞர் ஜெகநாத் தாக்கல் செய்துள்ள மனுவில் விவரம்:

தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் செய்யும் செயல்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மதமாற்ற வலியுறுத்தல் காரணமாக மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த மாதம் 12ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் இதேபோன்று மதமாற்ற சம்பவம் நடந்து, அதன் காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்தவ மெஷினரிகளால் நடத்தப்படும் உண்டு உறைவிட பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தொல்லைகள் தரப்படுகின்றன. கிறிஸ்தவ பள்ளிகளில் மதமாற்றம் உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பதை மாநில அரசும் கண்டுகொள்வதில்லை.  

பைபிளில் புதிய ஏற்பாட்டிலோ, பழைய ஏற்பாட்டிலோ மதமாற்றம் செய்யுங்கள் என்று எங்கும் கூறப்படவில்லை. ஆனால், பைபிள் வசனங்களுக்கு மாறாக இளம் சிறார்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றம் செய்யும் செயல்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு சலுகைகளையும் அறிவிக்கிறார்கள். ஆரம்ப பள்ளி, உயர் நிலைப்பள்ளி இந்து  மாணவிகளை குறிவைத்தே மதமாற்றம் நடைபெறுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதமாற்றம் அதிகம் நடைபெறுகிறது. இதுபோன்ற மதமாற்றங்கள் செய்வதை தடுக்க உரிய வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Government Scheme , In schools, compulsory, religious conversion, immediate, action, Government of Tamil Nadu
× RELATED சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும்...