மும்பை: ஐபிஎல் தொடரில் ஒரு சில அணிகளில் தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னையை தவிர மற்ற அணிகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழக வீரர் பரத்வாஜ் சாய் சுதர்சன்(20), ரவிசீனிவாசன் சாய் கிஷோர்(25), தமிழக அணியின் கேப்டன் விஜய் சங்கர்(31) ஆகியோர் இடம் பிடித்தனர். இவர்களில் விஜய் சங்கர், சாய் சுதர்சன் இருவருக்கும் மாறிமாறி வாய்ப்பு தரப்படுகிறது.
சாய் தனது அறிமுக ஆட்டத்திலேயே பஞ்சாப்புக்கு எதிராக 30 பந்துகளில் 35ரன் எடுத்து கவனம் ஈர்த்தார். அடுத்து ஐதராபாத்துக்கு எதிராக 11ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதனால் அடுத்த 4 ஆட்டங்களில் வாய்ப்பு தரப்படவில்லை. மீணடும் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் களம் கண்ட சாய் 14பந்துகளில் 20ரன் அடித்து அவரும் வெற்றிக்கு காரணமானார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த மீண்டும் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில், விக்கெட்கள் மளமளவென சரிய, சாய் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 65* ரன் விளாசினார். குஜராத் அணியில் மட்டுமல்ல, எதிர்த்து விளையாடிய பஞ்சாப் அணியிலும் அந்த ஸ்கோரை யாரும் எடுக்கவில்லை. இருப்பினும் குஜராத் தோற்றதால் சாயின் ஆட்டம் கவனிக்கப்படவில்லை. ஆனாலும் தமிழக ரசிகர்கள் அவரை ‘சபாஷ் சாய்’ என கொண்டாடி வருகின்றனர்.
தனது அதிரடி ஆட்டம் காரணமாக மும்பையுடன் நாளை குஜராத் மோத உள்ள ஆட்டத்தில் அவர் கட்டாயம் விளையாடுவார். அதனால் சாய் ஆட்டத்தை மீண்டும் காண தமிழக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.