×

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம் : மாணவர்களுக்கு ஈபிஎஸ், சீமான், ஓபிஎஸ் உள்ளிட்டோர் வாழ்த்து!!

சென்னை : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி, சீமான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்னர். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று  காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 8,37,317 மாணவசெல்வங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று பலமுன்னேற்றங்களை நீங்கள் அடைவதற்கு அச்சாணியாக இருக்கும் இந்த பொதுத்தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று சிறப்புடன் செயல்பட வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகின் நாயகர்களான எனதன்பு தம்பி – தங்கையர்கள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
தன்னம்பிக்கையோடும்,  உள்ளத்தெளிவோடும் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்! வென்று மென்மேலும் உயர்ந்து செல்லுங்கள்! என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவ, மாணவியர் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிட எனது நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,EPS ,Seeman , Tamil Nadu, Plus 2, General Examination, EPS, Seeman, OBS
× RELATED சொல்லிட்டாங்க…