பாரீஸ் : டென்மார்க் பயணத்தை முடித்து கொண்டு பிரான்ஸ் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி கடைசி நாடாக நேற்று பிரான்ஸ் சென்று அடைந்தார். அங்கு சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இரு நாட்டு நல்லுறவு, உக்ரைன் பிரச்சனை, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர்.
முன்னதாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள விமான நிலையத்தில் வந்து இறங்கிய மோடிக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு கொடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் மேளதாளம் முழங்க மகிழ்ச்சி பொங்க மோடியை வரவேற்றனர். 3 நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டார். முன்னதாக டென்மார்க்கில் நடைபெற்ற 2வது நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, நார்வே, சுவீடன் உள்ளிட்ட 5 நாட்டு பிரதமர்களை சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவு, வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.