×

7வது மாடியில் இருந்து தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

பெரம்பூர்: ஓட்டேரி ஸ்டிபன்சன் சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வனிதா(35). இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தில் கணவர் இறந்துவிட்டார். கடந்த 8 மாதங்களாக தனது தம்பி தினேஷ்கமார், தாயார் மற்றும் 2 குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் வனிதாவின் இரண்டரை வயது பெண் குழந்தையான கவாஷ் வீட்டின் சோபா மீது ஏறி நின்றுக்கொண்டு ஜன்னலை திறந்து விளையாடிக்கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஜன்னல் வழியாக 7வது மாடியிலிருந்து குழந்தை தவறி கீழே விழுந்தது. உடனடியாக அவரது தாய் மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு புளியந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டரை வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Failed child, killed
× RELATED ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...