×

விசாரணைக்கு வந்தவர் மரணம் சிபிசிஐடி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த ஏப்ரல் 29ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் இந்த அவையில் நேரமில்லா நேரத்தில் பேசியபோது, திருவண்ணாமலை சம்பவம் குறித்து அவையினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தார். அதற்கு விளக்கமளித்து நான் பேசியபோது, ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன். உடற்கூராய்வு முடிந்ததற்குப் பின்பு, இந்த அவைக்கு அதனை தெளிவுபடுத்துவேன் என்று சொல்லி இருந்தேன்.

அதுகுறித்த தகவல் என்னவென்றால், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் மது விலக்கு வழக்கு பதிவு செய்து கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்ட தங்கமணி, கிளைச் சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவருக்கு வலிப்பு ஏற்பட்ட காரணத்தால் 27ம் தேதி மரணம் அடைந்திருக்கிறார். மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து, நீதித் துறை நடுவரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உடற்கூராய்வு முடிக்கப்பட்டது. காவல்துறை வடக்கு மண்டல தலைவர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இறந்தவரின் உறவினர்களிடம் நடந்த சம்பவங்களையெல்லாம் கூறி, மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையெல்லாம் காண்பித்து விளக்கி, புலன் விசாரணை நியாயமாக நடத்தப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டு, இறந்தவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழக்கு விசாரணை மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு- சி.பி.சி.ஐ.டி விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது. தங்கமணியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய காவல் துறையினர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்கள். மாநில குற்றப்புலனாய்வுத் துறையின் புலன் விசாரணை அறிக்கையின்படி, அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : CBCID ,CPCIT ,CM K. Stalin , CPCIT investigation, action, Chief MK Stalin, trial prisoner death
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...