மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சூறைக்காற்றுடன் கனமழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து நாசமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ளது சிறுமுகை. இங்குள்ள லிங்காபுரம், மொக்கைமேடு, காந்தவயல், பாலப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கதலி, நேந்திரன், பூவன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழைகளை பயிர் செய்து வருகின்றனர்.
தற்போது வாழைகள் குலை தள்ளி இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யும் பருவத்தில் இருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் லிங்காபுரம், மொக்கைமேடு, காந்தவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நன்கு காய்த்திருந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசமாகின. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்தனர்.