×

பெரம்பலூர் அருகே மெடிக்கல் கடை உரிமையாளர் அடித்துக்கொலை: 2 பேருக்கு வலை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் மெடிக்கல் கடை உரிமையாளரை அடித்து கொலை செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ஆர்.புதுப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (44). தற்போது, பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் சிவன்கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மணிமேகலை (38). இவர்களது மகன் கனிஷ் (14). கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையிலிருந்த நாகராஜனை, லாடபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிரபாகரன் (29) மிரட்டி பணம் பறித்து சென்றார். நாகராஜன் சற்று பயந்த சுபாவம் கொண்டவர் என்பதை அறிந்த பிரபாகரன், அடிக்கடி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

நேற்று மாலையிலும் வழக்கம்போல் பணம் கேட்போது, ‘என்னிடம் பணம் இல்லை’ என்று நாகராஜன் கூறியுள்ளார். அதோடு, பிரபாகரனின் தந்தை பெரியசாமியிடம் புகார் செய்தார். இதனால் கோபமடைந்த பிரபாகரன், தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த ரகு (எ) ரகுநாத் (23) என்பவருடன் சேர்ந்து, நாகராஜனை தனியாக அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, விரட்டி விரட்டி தாக்கினர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நாகராஜனின் ஆதரவாளர்கள் திரண்டதால் பிரபாகரன், ரகுநாத் தப்பி ஓடினர்.

பின்னர் காயமடைந்த நாகராஜன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்றிரவு திடீரென ரத்தவாந்தி ஏற்பட்டது. மீண்டும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், நாகராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, பிரபாகரன், ரகுநாத்தை தேடி வருகின்றனர்.


Tags : Perambalur , Perambalur, Medical Store, Owner, Beaten
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...