ஊட்டி: ஊட்டி ஜேஎஸ்எஸ், பார்மஸி கல்லூரி சார்பில் குன்னூர் நெடுகல்கொம்பை பழங்குடியின கிராமத்தில் ஒரு வார கால நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாம் கல்லூரி முதல்வர் தனபால் தலைமையில் நடந்தது. இம்முகாமில் பங்கேற்ற என்எஸ்எஸ் மாணவ, மாணவிகள் நெடுகல்கொம்பை கிராமத்தில் நடைபாதை தூய்மை செய்தல், முட்புதர் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பணிகளில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் போஸ்லே சச்சின் துக்காராம் அறிவுரையின் படி ஊட்டி அருேக தொட்டபெட்டா பகுதியில் வனம் மற்றும் கோத்தகிரி செல்லும் சாலையோரங்களில் குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகளில் ஈடுபட்ட மாணவர்கள் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கழிவுகளையும் சேகரித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஊட்டி-கூடலூர் சாலையில் தலைக்குந்தா, பைன் பாரஸ்ட் பகுதிகளில் சாலையோர வனப்பகுதிகளில் குப்பைகளை அகற்றினர். இதேபோல் அவலாஞ்சி பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒரு வார கால சிறப்பு முகாமினை நாட்டு நலப்பணி அலுவலர்கள் செந்தில், பாபு ஆகியோர் ஒருங்கிணைந்து மேற்கொண்டனர்.