நிலக்கோட்டை: கொடைரோடு அருகே ஜல்லிப்பட்டி பிரிவிலுள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன் பெய்த மழையால் பாலத்தின் அடியில் மழைநீர் வெளியேற வழியின்றி வாகனங்கள் செல்ல முடியாதளவிற்கு குளம்போல் தேங்கியது.
இதனால் அப்பாலம் வழியாக செல்லும் ஜல்லிபட்டி, நாயகவுண்டன்பட்டி, மீனாட்சிபுரம், தொப்பிநாயக்கம்பட்டி உள்ளிட்ட கிராமத்தினர் சுமார் 5 கிமீ தூரம் சுற்றி சென்று வந்தனர். தற்போது குளம்ேபால் தேங்கியிருந்த மழைநீர் வற்றி சேரும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியே டூவீலர்களில் செல்வோர் சகதியில் சிக்கி தடுமாறி விழுந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும் தேங்கிய மழைநீர் சகதியால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ெகாசுக்கள் உற்பத்தியாகும் கூடாரமாகவும் உள்ளது. இதனால் மழைநீர் வற்றியும் கிராமமக்கள் அப்பகுதியை பயன்படுத்தாமல் 5 கிமீ சுற்றி வரும் நிலையே தொடர்கிறது. எனவே இப்பாலத்தின் அடியில் சேறு, சகதி நிறைந்த மழைநீரை முழுமையாக அகற்றி இவ்வழியே பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.