சென்னை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக ரத்னவேல் நீடிப்பார் என பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு ரத்னவேல் மாற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தார். ரத்தினவேலை மீண்டும் நியமிக்க பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்த கோரிக்கையை அடுத்து மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர் என்பதால் ரத்தினவேல் மீண்டும் பணியில் நியமனம் செய்யப்பட்டதாக கூறினார். இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவர் அதே பணியில் பணியமர்த்தப்படுவார் என அமைச்சர் பேரவையில் அறிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனை கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி எடுத்ததாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி விளக்கம் அளித்த மாணவர்கள், சமஸ்கிருதத்தில் நாங்கள் உறுதிமொழி ஏற்கவில்லை. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு தேசிய மருத்துவ கவுன்சிலர் வெளியிட்டுள்ள ‘மகரிஷி சரக் சபத்’ உறுதி மொழியைத்தான் நாங்கள் எடுத்து கொண்டோம் என மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.