திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வயலில் வேலை செய்த பெண்கள் ஜூஸ் குடித்தபோது வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆரணி அருகே மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவரின் நிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த 24 பெண்கள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெயில் நேரம் என்பதால் குமரேசன் உள்ளூர் கடை ஒன்றில் ஜூஸ் வாங்கி வந்து பெண்களுக்கு குடிக்க வழங்கினார்.
இதையடுத்து ஒரு குழந்தை உள்பட 18 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 18 பேரில் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.