கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காற்றுக்காக மொட்டை மாடியில் தூங்கியவர்களின் வீட்டை உடைத்து மர்மநபர்கள் 45 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பண்ருட்டி அடுத்த பூங்குனம் அருணாச்சல நகரை சேர்ந்த சுரேஷ் என்பவரது வீட்டில் தான் இந்த கொள்ளை அரங்கேறியுள்ளது. சிங்கப்பூரில் வேலை செய்து வரும் சுரேஷ், வீடு கட்டுவதற்காக வங்கி லாக்கரில் வைத்திருந்த 48 சவரன் நகைகளை எடுத்து வந்து விற்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறார். 5 லட்சம் ரூபாயும் பீரோவில் இருந்திருக்கிறது. இந்நிலையில் வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் அனைவரும் நேற்று இரவு மொட்டை மாடிக்கு சென்று உறங்கியுள்ளனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். சுரேஷ் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 48 சவரன் நகைகள் மற்றும் 5 லட்சம் ரொக்கம் திருடு போயிருக்கிறது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.