ஜோத்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூரில் நேற்று முன்தினம் இரவு ரம்ஜான் கொண்டாட்டம் தொடங்குவதற்கு முன் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் 5 போலீசார் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இந்நிலையில், நேற்று காலை ஈத் தொழுகைக்கு பின் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 10 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
உதய் மந்தீர், நகோரி கேட், கந்தா பால்சா, பிரதாப் நகர், தேவ் நபர், சூர் சாகர், சர்தார்புரா உள்ளிட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை மேலும் பரவாமல் கட்டுப்படுத்த, ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வர் அசோக் கெலாட், உள்துறை அமைச்சர், உள்துறை செயலாளர் , ஏடிஜிபி உள்ளிட்டோரை சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநில மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.