பழநி: ரம்ஜான் பண்டிகை காரணமாக கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்கள் 4 நாட்கள் தொடர் விடுமுறை விட்டுள்ளன. இதனால் திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. ரம்ஜான் தினமான நேற்று தமிழக பக்தர்களின் வருகையும் அதிகளவு இருந்தது. இதனால் வின்ச், ரோப்கார் நிலையங்களில் ரோடு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். மலைக்கோயிலில் கட்டண தரிசன வரிசையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயில் அன்னதானத்திலும் பக்தர்கள் காத்திருந்து உணவருந்தும் நிலை ஏற்பட்டது.