×

திருப்போரூரில் நீதிமன்றம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள், வழக்கறிஞர்கள் கோரிக்கை

திருப்போரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 2 இடங்களில் மாவட்ட நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. மேலும் தாம்பரம், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் முன்சீப் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான திருப்போரூர் தற்போது சட்டமன்ற தொகுதி, ஒன்றியம் மற்றும் தாலுகா தலைமையிடமாக உள்ளது. திருப்போரூர், மானாம்பதி, தாழம்பூர், கேளம்பாக்கம் ஆகிய செங்கல்பட்டு மாவட்ட காவல் நிலையங்களிலும், துரைப்பாக்கம், கண்ணகி நகர், நீலாங்கரை ஆகிய சென்னை காவல் நிலையங்களிலும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதனால் இந்த காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றன.

கைதிகளை பாதுகாப்பாக அழைத்து செல்லுதல், தினமும் காவல் நிலையம் சென்று அங்கிருந்து வழக்கு சம்பந்தமான ஆவணங்களை எடுத்து கொண்டு நீதிமன்றம் செல்லுதல் ஆகியவை போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. சென்னைப் புறநகர் பகுதியான திருப்போரூரில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு  திருப்போரூர் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு செயல்படுகிறது.  

சட்டமன்ற தொகுதி தலைமையிடமாகவும், தாலுகா தலைமையிடமாகவும் விளங்கும் திருப்போரூரில் நீதிமன்றம் அமைந்தால் சுமார் 8 காவல் நிலைய வழக்குகள் இங்கு மாற்றம் செய்யப்பட்டு, வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். மேலும், திருப்போரூர், மாமல்லபுரம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வழக்கறிஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி செயல்படுகிறது. திருப்போரூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்கப்பட்டால் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Court to be set up in Thiruporur: Public, lawyers demand
× RELATED தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்